ஆழ்கடலின் பேரலையில் அனைத்தும் தடுமாறிய போது தைரியமாக எழுந்து நின்று கைக்கோர்த்தவன்
எங்கோ பூமாதேவி கோபக்கனலாய் பொங்கி எழும் போது பூவுலகம் மொத்தமும் அழையா விருந்தாளியாய் ஒன்று சேர வைத்தவன்
விழிகளில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைப்பதற்கு ஓடோடி வந்தது கரங்கள் அல்ல
ஒவ்வொருவரின் உணர்வுகளும்
நிறங்கள் பார்க்காமல்
மதங்கள் பார்க்காமல்
ஏற்றத்தாழ்வு பார்க்காமல்
உணர்வுகள் அனைத்தும் உறவுகளாய்
ஒன்று சேர்ந்த மனங்கள்
பார்ப்போற்றும் தலைவனாயினும்
பாமரக் குடிமகனாயினும்
பாரபட்சமின்றி அனைவரையும் ஒற்றுமையாக்கிய மகாத்மா இவன்
அனிச்சை மலராய் துன்பத்தில் மட்டுமே பூக்கிறவன்
தொட்டாச்சிணுங்கியாய் இன்பத்தில் சுருங்கிக் கொள்கிறான்
மனிதன் முதன் முதலில் உச்சரித்த வார்த்தை
அன்பின் அடித்தளமாய் விளங்கும் அம்மா என்பதால் தான்
அவனுக்குள் இருக்கும் அன்பான உணர்விற்குப் பெயர்
மனிதம் என்றானதோ ?