Thursday, October 8, 2020
Friday, October 2, 2020
Sunday, September 27, 2020
மனிதம்
ஆழ்கடலின் பேரலையில் அனைத்தும் தடுமாறிய போது தைரியமாக எழுந்து நின்று கைக்கோர்த்தவன்
எங்கோ பூமாதேவி கோபக்கனலாய் பொங்கி எழும் போது பூவுலகம் மொத்தமும் அழையா விருந்தாளியாய் ஒன்று சேர வைத்தவன்
விழிகளில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைப்பதற்கு ஓடோடி வந்தது கரங்கள் அல்ல
ஒவ்வொருவரின் உணர்வுகளும்
நிறங்கள் பார்க்காமல்
மதங்கள் பார்க்காமல்
ஏற்றத்தாழ்வு பார்க்காமல்
உணர்வுகள் அனைத்தும் உறவுகளாய்
ஒன்று சேர்ந்த மனங்கள்
பார்ப்போற்றும் தலைவனாயினும்
பாமரக் குடிமகனாயினும்
பாரபட்சமின்றி அனைவரையும் ஒற்றுமையாக்கிய மகாத்மா இவன்
அனிச்சை மலராய் துன்பத்தில் மட்டுமே பூக்கிறவன்
தொட்டாச்சிணுங்கியாய் இன்பத்தில் சுருங்கிக் கொள்கிறான்
மனிதன் முதன் முதலில் உச்சரித்த வார்த்தை
அன்பின் அடித்தளமாய் விளங்கும் அம்மா என்பதால் தான்
அவனுக்குள் இருக்கும் அன்பான உணர்விற்குப் பெயர்
மனிதம் என்றானதோ ?
காதல்
சுவாசிக்கும் ஆக்சிஜன் ஹீலியம் வாயுவாக மாறிவிட்டதோ,
கால்கள் தரையை முத்தமிடாமல் மேலெழும்பி பறக்கிறது
இடி இடிக்காமல் வருணன் வராமல் இமைகளை இதமாக மின்னல் தாக்கிய காரணத்தினால் தானோ
இனம்புரியாத உணர்வு இதயத் துடிப்புடன் நட்பு பாராட்டுகின்றது
பெருவெடிப்புக் கொள்கையின் மூலம் உலகம் தோன்றியது என்று கூறும் அறிவியல்
எந்தக் கொள்கையின் மூலம் இவன் தோன்றினான் என்று கூற மறுக்கின்றது....,
ஆதாம் ஏவாள் சாப்பிட்ட ஆப்பிளின் மிச்சத் துளிகள் அழியா வரத்தை ஆண்டவனிடம் பெற்று விட்டதோ ....!
புதுவிதமான உணர்வை உடலெங்கும் பரவச் செய்கின்றது....,
மங்கிய பார்வையின் வெளிச்சத்தில் மங்காத ஆதவனாய் காட்சி அளிக்கிறான் கைப்பேசியின் திரையில் ....,
ஏட்டில் படிக்காதவனையும் ஏற்றமெடுத்து கவி பாட வைக்கும் வல்லவன்
பல வருடங்களாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை பேரும் புகழுடன் கம்பீரமாக நிற்க வைத்த காரணக்கர்த்தா இவன்
ஒரு ஆணையும் தாயாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரன்
இவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்
காலம் உள்ள வரை தானும் இருப்பேன் என்ற சபதம் மேற்கொண்டவன்
பல பெயர்கள் இருந்தாலும் அனைவரும் அழைக்கும் பெயர் ஒன்றே
அது தான் “காதல்”
Saturday, September 26, 2020
9. SPB இரங்கல் அஞ்சலி கவிதை | S. P. Balasubrahmanyam | SPB RIP Kavithai
Saturday, September 19, 2020
விடியல் உண்டு , சோர்ந்து போகாதே !
இந்த தலைப்பு இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல , நம் முன்னோர்கள் காலத்தில் நடந்ததையும் மேற்கோளாக காட்டலாம் , கஜினி முகமது பற்றி அனைவருக்கும் தெரிந்ததே, 17 முறை படையெடுத்து 18 வது முறையாக வெற்றிக் கொண்டார் என்பது .
அவர் முடியாது என்று சோர்ந்து போயிருந்தால் வெற்றி என்பது கிடைத்திருக்குமா? முயற்சி என்ற விடியலை நாம் அனைவரும் சோர்ந்து போகாமல் என்றும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
மண்ணில் புதைக்கும் விதை சோர்ந்து போயிருந்தால்
சூரிய வெளிச்சம் என்னும் விடியலை பார்க்க முடியுமா,
உளியின் வலியை தாங்க முடியாமல் பாறையானது சோர்ந்துப் போயிருந்தால் கையெடுத்து கும்பிடும் கடவுள் சிலையும் கலை நயத்தோடு காணும் சிலையும் நமக்கு கிடைத்திருக்குமா என்பது ஐயமே !
நம் கண்முண்ணே தவழ்ந்து விளையாடும் குழந்தையே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு தான்..!
எத்தனை தடவை தடுமாறி கீழே விழும் போதெல்லாம் சோர்ந்துப் போயிருந்தால் நடை பயில்வது என்பது சாத்தியமன்று. ஒவ்வொரு முறையும் படும் வலியை பொருட்படுத்தாமல் தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல் வெற்றி என்னும் விடியலை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.
நண்பர்களே, வாழ்க்கையில் பல தடைகள் என்றும் உண்டு. தடைகளைப் பார்த்து தடுமாறி போகாமல் நம்பிக்கை என்னும் உயிர்த் துடிப்புடன் முடியும் என்று முயன்று கொண்டே இருந்தால் வெற்றி என்னும் விடியல் நிச்சயம் கிடைக்கும் ,
எத்தருணத்திலும் சோர்ந்து போகாதீர்கள் ! விடியல் உண்டு !
நன்றி!
Friday, September 18, 2020
நீட் தேர்வு கவிதை | Neet Exam | Poem about Neet Exam
குடிசைச் சுவர்களின் நடுவில் கந்தலாடை மறைக்க கத்தியின்றி கணக்கில்லா சுகப்பிரசவம் பார்த்தவள் எந்த கல்லூரியில் படித்து எழுதினாள் இந்தத் தேர்வை ....,
எட்டு குழந்தை பெற்ற பின்பும் எட்டிப் பிடிக்கும் நடையினை நடந்த எமது தாய்மார்கள் எந்தக் குருகுலத்தில் கல்வி பயின்றார்கள்
பிழையில்லா மருத்துவம் பார்க்க....,
பொறுமையின் சிகரமாய் பூமித்தாய் இருப்பதாலும்
நீதித்தேவதையின் கண்களையும் கட்டி விட்ட தைரியத்தினால் தானோ
அரங்கேறுகின்றது இந்த அவலங்கள் ,
கட்டிய கணவன் முன்னே தாலியை கழட்டச் சொல்லும் கல்வியறிவு....,
ராமாயணத்தில் தீக்குளித்த சீதை
இன்றளவும் தீப்பிளம்பின் பிடியில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறாள்.
கலியுக ராவணர்களின் பிடியில் கல்வி சிக்கிக் கொண்டு பாரபட்சம் பார்ப்பதால் ...,
வஞ்சமில்லா பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்தவர்கள் யாரோ !
அகிலம் முழுவதும் மழலைச் செல்வங்கள்
சொல்லும் எதிர்கால கனவு ஒன்று தான்
மருத்துவம் பார்ப்பது ....,
கிழிந்த ஆடையும் எண்ணெய் வழிந்த முகத்தையும் ஏற்றுக் கொண்ட கனவை
புறம் தள்ளி நிறுத்தியது கவுரவம் என்ற கர்வம் ....,
காந்தியால் பெற்ற சுதந்திரம் கடைக்கோடி
ஏழை மகளை இன்னும் எட்டவில்லை போல,
கனவைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாமல் கரிக்கட்டையாக சாயும் தருணத்தில் ....,
இதுவும் ஒரு நரபலி கொடுமை தானோ...!
ஒவ்வொரு முறையும்
உயிர்களை பலியிட்டப் பின்னரே ஆரம்பிக்கிறது....,
விடியல் உண்டு , சோர்ந்து போகாதே !
என்ற நம்பிக்கையும் கருவிழியின் மறுவிழியில்
பதிந்த நீண்டகால கனவும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று உணர வைக்க நடத்தப்படுவது தான் இந்த
“நீட்” தேர்வோ ....!
ஆறாம் அறிவை உயிர்ப்பிக்கும் கல்வியறிவு நீட் என்ற பெயருடன்
ஐந்தறிவு ஜீவன் போல் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க காத்திருக்கிறதோ ....!
Tuesday, September 15, 2020
கொரோனா கவிதை | Corona kavithai
Wednesday, September 9, 2020
Monday, September 7, 2020
நட்பு
எம்மதமும் சம்மதம் என்ற கூற்றை
உண்மையாக நிரூபித்துக் காட்டியவன்
உருவம் தெரியாதவன் இந்த உலகையே
ஆட்டிப் படைக்கிறான் அமைதிப் புரட்சியுடன்
நாற்காலி மீது அதிக மோகம் கொண்டவனோ
என்று எண்ணம் தோன்றுகிறது
அனைவரின் இதய சிம்மாசனத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளதால்
இன்பத்தில் பின்னால் நின்று சந்தோசப்படுவான்
துன்பத்தில் முன்னால்
நின்று எதிர் கொள்வான்
மழலைச் செல்வங்கள் என்றும் பாராமல்
ஆக்கிரமித்துக் கொள்வான்
மரணம் வரை கூடவே சென்றிடுவான்
இரத்த பந்தம் ஏதும் இல்லாதவன்
ஆனால் இரத்தத்தையே கொடுக்கும் சொந்தக்காரன்
ஐந்தறிவோ ஆறறிவோ எவ்வுயிராயினும்
எண்ண ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் அரிதாரம் பூசிக்கொள்ளும் ஆன்மாவிற்கு சொந்தக்காரன்
இவன் மலரும் சத்தம் கேட்பதில்லை
மலர்ந்த பிறகு உதிரவும் இல்லை
யார்தான் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை
இவனுக்கு
நட்பு
என்று... !
Thursday, September 3, 2020
குழந்தை
குதூகலத்தின் இருப்பிடமாய்
இருப்பவன்
அனைவரின் கவலையையும்
ஒரே நொடியில் தகர்த்து எறிபவன்
இவனிடம் சரணாகதி அடையாதவர்
எவரும் இல்லை
ஒற்றை சிரிப்பால் உலகையே
வசியப்படுத்தி வைக்கும் வசியக்காரன்
இவனின் ஒற்றை வார்த்தை கேட்க
அனைவரும் தவம் கிடப்பார்கள் என்றே சொல்லலாம்
தெய்வமே இவனுக்கு அடுத்தப்படி தான்
என்பார்கள் பலரும்
கீழே விழுந்தால் தோல்வியை ஏற்காமல்
முயற்சியுடன் எழுந்து நிற்கும் தைரியக்காரன்
இவனின் அழுகை பலரின் சிரிப்பை போக்கும்
இவனின் சிரிப்பு பலரின் அழுகையை போக்கும்
அனைவரும் இவனிடம் குழைந்து குழைந்து பேசுவதால் தானோ இவனுக்கு பெயர்
“குழந்தை “
மனைவி
ஆதியும் அந்தமுமாய் அனைவருக்குள்ளும் வியாபித்திருப்பவள்
இன்முகத்தோடு வரவேற்ப்பாள்
ஈன்ற தாய்க்கு அடுத்தபடியாய்
உரிமையாய் வாதிடுவாள் எனக்காக
ஊட்டி வளர்த்தவர்களாக இருந்தாலும்.,
தனது கண்ணீரை மறைத்து
எனது கண்ணீரை துடைக்க ஓடி வருவாள்
எத்துன்பத்திலும்..,
தனக்கு பிடித்தவற்றை மறந்து
எனக்கு பிடித்தவற்றை ஏற்றுக்கொள்வாள்
அது பிடிக்காவிட்டாலும் கூட.,
எல்லோருக்கும் ஓய்வென்று ஒரு நாள்
இவளுக்கோ
எந்நாளும் ஓய்வில்லா திருநாள்
சுயநலம் கொண்டவளோ என்ற எண்ணம் தோன்றுகிறது
அன்பு பாராட்டுவதில் அன்னையையே மிஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்..,
கருவறையில் பத்து மாதம் குழந்தையையும்
மனதறையில் மொத்த காலமும் என்னையும்
சுமக்கிறாள்
மூன்றே மூன்று முடிச்சுக்கு மதிப்பளித்து,
“மனைவியாய்”